ETV Bharat / state

ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று சொல்கிறார்கள்.. ஆனால்... - இபிஎஸ் பேச்சு

author img

By

Published : Sep 16, 2022, 7:07 AM IST

நிறைய பேர் ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று சொல்கிறார்கள்.. ஆனால்... - இபிஎஸ் பேச்சு
நிறைய பேர் ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று சொல்கிறார்கள்.. ஆனால்... - இபிஎஸ் பேச்சு

ஒன்று சேர்ந்து விடுவோம், ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று சொல்கிறார்கள். ஆனால் அது நிச்சயம் நடைபெறாது என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை: அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக தென் சென்னை, வடக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் தி.நகர் சத்யா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது , “நிறைய பேர் சொல்கிறார்கள் ஒன்று சேர்ந்து விடுவோம்; ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று. அது நிச்சயம் நடைபெறாது. இனி அதிமுகவிற்கு தொண்டன்தான் தலைவன். இதில் எந்த மாற்றமும் இல்லை. கொள்ளை அடிப்பதற்கு கட்சி அல்ல.

நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்கு மட்டுமே கட்சி. கழகத்தை பிளவுப்படுத்த நினைக்கிறவர்கள் கானல் நீர்போல் கரைந்து போவார்கள். எம்.ஜி.ஆர் அதிமுகவை தோற்றுவிக்கும்போது அண்ணாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அவரது பெயரிலேயே அண்ணா திமுக என்று பெயர் வைத்தார்.

ஓட்டு கிடைக்காது என்ற எண்ணம்: அண்ணா பெயரில் இயங்கி வரும் ஒரே கட்சி அதிமுகதான். நாள்தோறும் 63 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவு அளித்தவர், எம்.ஜி.ஆர்.. மலிவு விலையில் உணவு கிடைக்கும் வகையில் அம்மா உணவகத்தை கொண்டு வந்தவர், ஜெயலலிதா. அம்மா உணவகத்தை தற்போதைய அரசு மூட நினைத்தால் அதற்கான பதிலடியை மக்கள் தேர்தலில் கொடுப்பார்கள்.

மக்கள் நிச்சயம் தகுந்த பாடம் புகட்டுவார்கள். மறைந்த பிறகும் மக்கள் மனதில் வாழும் தலைவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய மூவரும்தான். மாணவர்களுக்கு விஞ்ஞான ரீதியில் அறிவுப்பூர்வமான கல்வி கிடைக்க அதிமுக ஆட்சியில் மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆனால் அறிவுப்பூர்வமான கல்வி கிடைத்தால் ஓட்டு கிடைக்காது என்ற ஒரே காரணத்துக்காக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை திமுக அரசு நிறுத்தியுள்ளது. 32 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியை கொடுத்த கட்சி அதிமுக. கல்வியில் சிறக்கும் மாநிலம்தான் வளர்ச்சி அடையும்.

அத்தகைய தரமான கல்வி கிடைக்க தமிழ்நாட்டில் அதிகமான கல்லூரிகளை திறந்தவர், எம்.ஜி.ஆர். தொடர்ந்து ஜெயலலிதா கல்விக்கு அதிகம் நிதி ஒதுக்கி கல்வித்துறையில் செய்த புரட்சியின் காரணமாக தமிழ்நாடு கல்வித்துறையில் முதன்மை மாநிலம் என்ற இலக்கை அடைந்தது.

தில்லு முல்லு செய்துதான் திமுக.. நான் முதலமைச்சராக இருந்தபோது 7 சட்டக் கல்லூரிகள், 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தேன். ஆனால் திமுக அரசு 15 மாதங்கள் ஆகியும் ஒரு கல்லூரியையும் கொண்டு வரவில்லை. தமிழ்நாட்டில் பாதி பேருக்கு முதியோர் உதவி தொகையை திமுக அரசு நிறுத்தியுள்ளது. முதியோர் வயிற்றிலும் அடிக்கும் கட்சிதான் திமுக.

அதிமுக மீது எப்போது பார்த்தாலும் பொய் வழக்கை போடுவதுதான் திமுக அரசின் முதல் வேலையாக இருக்கிறது. சட்டப்படி ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லும் திமுக அரசு, திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், இப்போதைய அமைச்சர்கள் மீது உள்ள 13 வழக்குகளை நியாப்படி நடத்தாதது ஏன்?

மக்களின் ஆதரவை பெற்று ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவில்லை. தில்லு முல்லு செய்துதான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வுதிய திட்டம் கொண்டு வருவோம் என்றனர். ஆனால் ஜாக்டோ ஜியோ மாநாட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.

கரோனாவுக்குப் பிறகு மெல்ல மெல்ல மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருமானம் ஈட்டி வந்த சூழ்நிலையில் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் ஆகியவற்றை திமுக அரசு உயர்த்தி உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சருக்கு நாட்டைப் பற்றியும் கவலையில்லை; மக்களை பற்றியும் கவலையில்லை.

கடுமையான மின் கட்டண உயர்வை திமுக அரசு திரும்ப பெற வேண்டும். அமைச்சர் மா.சுப்ரமணியன் வாயை திறந்தால் பொய்யை தவிர வேறு எதுவும் வராது. அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்தது போன்று அமைச்சர் மா.சுப்பரமணியன் பேசி கொண்டிருக்கிறார்.

ஆ.ராசா மீது கடும் தாக்கு: நீட் தேர்வு விலக்கு பெற ஆட்சியில் இருக்கும்போதும் இப்போதும் போராடி வரும் கட்சிதான் அதிமுக. எதில் ஊழல் செய்தாலும் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் திமுகவைச் சேர்ந்தவர்கள் திறமைசாலிகள். ஆனால் அதிமுகவில் வெகுளியாக இருக்கிறார்கள். அதிமுகவில் தொண்டன்தான் தலைவர்.

இந்துக்களை பற்றி சொல்லக்கூடாத வார்த்தையை கீழ்த்தரமான வார்த்தையாக சொல்லி இருக்கிறார் ஆ.ராசா. ஆ.ராசா சொன்ன வார்த்தை திமுக தலைவர் குடும்பத்திற்கும் பொருந்துமா? என்று நான் கேட்கவில்லை; மக்கள் கேட்கிறார்கள். அம்மாவின் அரசு மீண்டும் அமையும்போது தோல் உரித்து காட்டப்படும்.

15 மாத ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த பலன் வேதனையும் துன்பமும்தான். உழைப்பாளியை கேட்டால்தான் AM, PM என்றால் என்னவென்று தெரியும். வாக்கிங் போவது, சைக்கிளிங் போவது, டீ குடிப்பதையும் வேலையாகக் கொண்டதுதான் தமிழ்நாடு முதலமைச்சரின் மினிட் டூ மினிட் வேலை.

அதிமுகவின் தொண்டர்களை தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினால் தொடக் கூட முடியாது. இல்லத்தரசிக்கு உரிமைத்தொகை 1,000 தருவோம் என்று சொன்னது திமுக. ஆனால் இதுவரை அறிவிப்பு வரவில்லை. சமையல் எரிவாயு மானியம் 100, கல்வி கடன் தள்ளுபடி, முதியோர் உதவித் தொகை உயர்வு என எந்த அறிவிப்பையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.

அப்பாவின் உழைப்பால் முதலமைச்சர்: திட்டத்தை அறிவித்து அதற்கு குழு அமைக்கிறார். அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அலுவலர்களை நம்பினால் குழுவை மட்டும் அமைத்து குழு அரசாக திமுக அரசு உள்ளது. திமுக கட்சி அல்ல. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. குடும்பம் தான் இயக்குனர், நிர்வாகிகள் பங்குதாரர்கள்.

திமுக அரசு வரவு செலவை மட்டும்தான் செய்கிறது. மக்கள் நலனில் அக்கறையில்லை. போராட்டத்திற்கு அதிகம் அனுமதி கொடுத்த கட்சி அதிமுக. ஆனால் திமுக அரசு ஒரு போராட்டத்திற்கு கூட அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். எதிர்கட்சிகளை திமுக அரசு நசுக்க பார்க்கிறது.

ஆனால் ஸ்டாலினின் தந்தையாலேயே ஒடுக்க முடியவில்லை. நான் தற்காலிக தலைவரா? ஸ்டாலின்தான் தற்காலிக தலைவராக இருந்தார். கட்சியில் தலைவர் பதவி கொடுக்க ஸ்டாலினின் தந்தையே ஸ்டாலினை நம்பவில்லை. அதனால் கருணாநிதி உயிரோடு இருந்தபோது செயல் தலைவர் பதவியை கொடுத்தார்.

அப்பாவின் உழைப்பால்தான் ஸ்டாலின் முதலமைச்சர், கட்சி தலைவர் ஆகியுள்ளார். தமிழ்நாட்டில் தற்போதைய ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திருட்டு, கொலை, கொள்ளை தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் சந்தி சிரிக்கிறது” என பேசினார்.

இதனைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட கழகச் செயலாளர்கள், பாலகங்கா, விருகை விஎன்.ரவி, ஆதிராஜாராம், வேளச்சேரி எம்.கே.அசோக், கே.பி.கந்தன், ஆர்.எஸ்.ராஜேஷ், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: காலை சிற்றுண்டி திட்டத்தை ஆரம்பித்த முதலமைச்சரே அதை அவமானப்படுத்தியுள்ளார் - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.